ஒக்கூர் என்று அழைக்கப்படும் ஒக்கநாடு கீழையூர் தஞ்சையிலிருந்து 30 மைல் தூரத்தில் உள்ள ஊர். ஒரத்தநாட்டிலிருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது. அங்கு விவசாயம் முக்கியத் தொழில். அந்த ஊரின் தோற்றம் குறித்து பல்வேறு கதைகள் உள்ளன.
நாட்டுக்குள்ளேயும்நாலு நாடு
நலம் பெறும் ஒக்கநாடு
பச்சிலை பறிக்கா நாடு
பைங்கிளி நோகாத நாடு
கள்ளர் மரபு தவறாத நாடு
கடல் தண்ணீயை வாட்டும் நாடு
சொல்லுக்கும் பெரிய நாடு
நிகழத்தால் பதில் சொல்லும்
சுயமரியாதை உடைய நாடு
ஊர்ப்பெயர்கள்
பல்வேறு கதையாடல்களுக்கு நிலைகளனாக விளங்குகின்றன. ஒக்கூரும் பல தொன்மரபுகளையும் கதையாடல்களையும்
கொண்டுள்ளதை மேற்கண்ட பாடல் மூலம் அறியலாம். இப்பாடலில் நாட்டுக்குள்ளேயும் நாலு
நாடு என்று குறிப்பிடுவது காசவளநாடு, கோணூர்நாடு ,ஒக்கநாடு, பைங்காநாடு என்னும் ஊர்களாகும். 10,11 ஆம் நூற்றாண்டுகளில்
இது போன்ற அமைப்பு காணப்பட்டுள்ளது. பின்னால் ஒவ்வொரு நாட்டுக்குள் இருந்த
ஊர்களும் பிரிந்து உள்ளன. ஒக்காடு என்னும் ஊர் பின்னால் மேலையூர் கீழையூர் என்றும்
பிரித்துள்ளது. இதில் நிகழத்தால் பதில்
சொல்லும் நாடு என்பது பிற ஊர்களில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அது தொடர்பாக
பஞ்சாயத்துக் கூட்டச் சொல்லி அனுப்படும் நாட்டோலையைக் குறிக்கும். இந்த ஊரில்
நடக்கக் கூடிய வழக்குகளுக்கு மட்டுமல்லாமல் அவ்வூரைச் சுற்றி இருக்க கூடிய மற்ற
ஊர்களிலும் வழக்குகள் இருந்தால், தீர்த்து வைக்கும் ஊராகவும் ஒக்கூர்
இருந்துள்ளது. இன்றும் அந்நிலை இருப்பதைக் காணமுடிகின்றது.
இந்த ஊரில் கள்ளரும் வெள்ளாரும் ஒருங்கு இருந்ததாகவும்.
வெள்ளார் இனத்துப் பெண் ஒருத்தி வேறு சாதிப் பையனை விரும்பியதால் தங்களது இனத்துக்கு
பெரிதும் இழுக்கு வந்துவிட்டதாக்க கருதி அந்த ஊரில் இருந்த வெள்ளாளர் இனக் குடிகள்
எல்லாம் தீக்குழி வெட்டி, கட்டக்குடி என்னும் ஊர் அருகே தீ பாய்ந்த தாகவும்
அத்தீயில் விழப்போனவர்களைக் காப்பாற்ற கள்ளர் இன மக்கள் முயன்றதாகவும் அதற்கு
அவர்கள் வர மறுத்து தீக்குழியில்
விழுந்துவிட்டார்கள் என்றும் விழுவதற்கு முன் இருப்பவர்களுடன் சேர்ந்து பிழைத்துக் கொள்ளுங்கள்
என்று கூறியதாகவும் அதுவே சேந்தமுடையார் என்று ஒரு பட்டப்பெயர் வந்ததாகவும்
கூறப்படுகின்றது. வெள்ளாளர்கள் தீயில் பாய்ந்த பகுதி கட்டக்குடியில் தீபாஞ்ச குளம் என்னும் பெயரில் இன்றும்
இருக்கின்றது.
அதிலிருந்து ஒக்கூர்
பகுதியல் வசித்த கள்ளருக்கு,
சேந்தமுடையார் எனப்பட்டப் பெயர் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. சேந்தமுடையார்
பட்டப்பெயரைச் சார்ந்த பழனி சேந்தமுடையார்
என்பவருக்கு இரண்டு பெண் ஒரு ஆண் பிள்ளைகள். தஞ்சைப் பகுதியிலிருந்து மகாதேவபட்டிணக்
கோட்டைக்கு காவலுக்குச் சென்ற அண்ணன் தம்பி பெரிய மொத்தி ,சின்ன மொத்தி என்னும்
இருவரையும் பழனி சேந்தமுடையாரின் பெண்கள்
விரும்பியுள்ளார்கள். தமது பெண்களின விருப்பத்தை அறிந்த பழனி சேந்தமுடையார் உடன்
பட்டு, திருமணம் செய்து வைக்க சம்மதித்துளார். பெரிய மொத்தி, சின்ன மொத்தி
இருவரையும் தன்னுடைய பெண்களைத் திருமணம் செய்துகொள்ள விருப்பமா என்று கேட்டபொழுது, பெரிய மொத்தி தனக்கு ஏற்கனெவே தஞ்சராயன்
மகளுடன் திருமணம் ஆகிவிட்டது என்று கூற, திருமணம் ஆகியிருந்தாலும் பரவாயில்லை
என்று கூறி, தன்னுடைய மூத்தப்பெண்ணை பெரிய மொத்திக்கும், சின்ன பொண்ணை சின்ன
மொத்திக்கும் திருமணம் செய்து கொடுத்து, ஒக்கூரிலேயே அவர்கள் வாழ்வதற்குரிய
வசதிகளைச் செய்துகொடுத்துள்ளார்.
பெரிய மொத்தியின்
மூத்த மனைவியான தஞ்சராயர் மகள் நீண்ட
நாட்களாக தன் கணவன் திரும்பாமல் இருந்த காரணத்தை அறிந்த பிறகு, தான் தன் கணவன்
இருக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டமெனத் தன் தந்தை வீட்டாரிடம் கூறிய பொழுது,
அவர்கள் மறுக்க, பிடிவாதமாக செல்லவேண்டமென்று கூறியுள்ளாள். அவர்கள் வேறு
வழியில்லாமல் இங்கிருந்து உனக்கு என்ன தேவையோ அதனை எடுத்துக்கொண்டு செல் என்று
கூற, அவள் அங்கிருந்த செல்லியம்மன் சிலை மட்டும் போது எனக் கூறி அதனை மட்டும்
தன்னோடு எடுத்துக்கொண்ட்டு ஒக்கூருக்கு வந்து, தன்னுடைய நிலையினைப் பழனி
சேந்தமுடையாரிடம் எடுத்துச் சொல்ல அவரும் அவளைத் தன் மகள் போல பாவித்து,
அவ்வூரிலேயே அவள் வாழ வழி வகை செய்து கொடுத்தாராம்.
ஒக்கநாடு, ஒக்கநாடு
மேலையூர் ஒக்கநாடு கீழையூர் என்று பிரிந்த பிறகு, அங்கு திருவிழா நடத்துவதற்குப்
பயன்படுத்திய செல்லியம்மன் சிலையினை மேலையூர் எடுத்துச் சென்றவிட, தஞ்சைராயன் மகள்
பெரிய மொத்தியின் மனைவி எடுத்து வந்த செல்லியம்மன் சிலையை வைத்துக்கொண்டு இன்றும்
திருவிழா நடத்துவதாக்க கூறப்படுகின்றது. இந்த பெண் அத்தெய்வத்தை வைத்துக்கொண்டு
வழிபட்டதாகவும், அவள் அத்தெய்வத்திற்காக வெட்டிய குளம் கிழவிக்குளம் எனவும்
இன்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த ஊரில் நடைபெறும் திருவிழாவை மையப்படுத்தியே, அனைத்து செய்லபாடுகளும் நடைபெறுகின்றன. திருவிழாவினை
அவ்வூரில் வாழும் பிற இனத்தாரின் அனுமதி / பங்கேற்புடன் தலைமை ஏற்று நடத்துவது பழனி சேந்தமுடையாருடைய குடும்பம், அவர்
குடும்பத்துக்கு முதல் மரியாதையும் முடியும் வழங்கப்படும். தமது மகளுக்குக்
குழந்தை பிறந்த பிறகு தமது பேரனை (மகள்
வயிற்றில் பிறந்தவனை) மடியில் வைத்துக் கொண்டு திருவிழாவின் போது மரியாதை பெற்றுள்ளார்,
அப்பொழுது அவர் மடியில் இருந்த பேரன் கையை
நீட்டியுள்ளான், பழனி சேந்முடையார் பேரன் கையிலேயே முடியை வழங்கும் படி கூறியுள்ளார். அக்குழந்தை பெரியவனாகும் வரை
தொடர்ந்துள்ளது. அவன் பெரியவனாக வளர்ந்த பிறகு பழனி சேந்தமுடையார் முதல்
மரியாதையும், முடியையும் தானே பெற்றுள்ளார், உடனே இத்தனை நாள் தன் கையில் வாங்கி
பழக்கப்பட்ட பேரன், தாத்தா இத்தனை நாள்
என்னை வாங்க சொல்லி விட்டு இப்பொழுது நீங்கள் வாங்குகிறீர்களே என்று கேட்க, பெரிய பெண்ணினுடைய வாரிசுக்கு முதல் முடியும்,
இரண்டாவது பெண்ணு வாரிசுக்கு இரண்டாவது முடியும், பெரிய மொத்தியின் மூத்த
மனைவியின் மகனுக்கு மூன்றாவது முடியும்
வழங்க சொல்லிவிட்டு, இறுதியாக அவரும் பெற்றுக்கொண்டாராம். இந்த வழமை மாறாமல்
இன்றும் திருவிழாவில் இம்முறை கடைப்பிடிக்கப்படுகின்றது.
குடும்பம் பெரிதாக
தொடங்கியவுடன், தெற்கு தெரு மூத்த பெண்ணின் வாரிசுகளுக்கு உடைமைப்பட்டது என்றும்,
மேலத்தெரு இரண்டாவது பெண்ணின் குடும்ப வாரிசுகளுக்கு என்றும், வடக்குத் தெரு மோத்தியின் முதல் மனைவி
வாரிசுக்கு என்றும், கிழத்தெரு தமது வாரிசுகளுக்கும் என பழனி சேந்தமுடையார்
பிரித்துக் கொடுத்துள்ளார். இத்தெருக்களில் வசிக்கும் மரபுவழி தோன்றிய வாரிசுகள்
தான் பஞ்சாயத்து குடும்பங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பின்னாள் வேறு
பட்டப்பெயர்களைக் கொண்ட குடும்பங்கள் வந்தாலும், இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் இன்று
வரை மரபு வழியாக பஞ்சாயத்து தலைவர்களாக இருக்கின்றார்கள்.
இவ்வூரில் 18
இனத்தார் இருப்பதாக கூறப்படுகின்றது. இப்பதினெட்டு இனத்தாரின் சம்மதம் பெற்ற பிறகே
பஞ்சாயத்தாரால் திருவிழா கூட்டப்படுகின்றது. திருவிழா கூட்டும் பொழுது ஏதேனும் வழக்குகள்/சிக்கல்கள் இருந்தால் சாவடியில் வைத்துப்
பேசப்பட்டு தீர்க்கப்படுகின்றன. அதன் பிறகு அங்குள்ள ஆலமரத்தின் கீழ் வேட்டி
விரித்து பஞ்சாயத்தார் (மரபு வழியாக வரக்கூடிய பஞ்சாயத்துக் குடும்பத்தை
சார்ந்தவர்கள்) கூடி திருவிழாவினைக் கூட்டுகின்றனர். அப்பொழுது யாரும் மறுத்து
பேசுவதோ, வழக்குகள் குறித்து சச்சரவுகளைக்
கிளப்புவதோ கிடையாது. அப்படி ஏதேனும் யாராவது மறுத்தோ வழக்கு குறித்தோ பேசினால்,
அடுத்த திருவிழாவிற்குள் பேசியவருக்கு ஏதேனும் கெடுதல் நேரிடும் என்ற நம்பிக்கை
இவ்வூர் மக்களிடம் காணப்படுகின்றது. ஆலமரத்துக்கு கீழ்வேட்டி விரித்து திருவிழா
கூட்டத் தொடங்கும் பொழுது மறுத்து பேசிய சிலர் அடுத்த ஆண்டு திருவிழாவிற்குள்
இறந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள். இவ்வூரில் 18 இனத்தை சேர்ந்த மக்கள்
வசித்தாலும் அவர்களுக்குள் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இன்றி
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, அடுத்தவர் உணர்வுகளைப் புரிந்துகொண்டு
நடக்கின்றனர். திருவிழாவின் போது எந்த
இனத்தாரும் விடுபாடு இன்றி அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் பங்களிப்பு நிகழ்த்தும்
வண்ணம் திருவிழாவின் பணிகள் அமைக்கப்படுகின்றன. திருவிழாவின் போது இவ்வூரில்
வசிக்க கூடிய தலித்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது.
this is some text after the jumb break
முனைவர் அவர்களுக்கு பாராட்டுக்கள் மரபு வழி கதையாடல்களும் நிழ்கால செயல்பாடுகளும் தொடர்புடன் இருப்பதால் கதையாடல் என்பைதவிட பழந்தமிழரின் வரலாறு இவை என்பது தங்கள் பதிவின் மூலம் அறியமுடிகின்றது.. தொடர்ந்து இது போன்று பல்வேறு ஊர்களின் முன் வரலாறுகளை தொகுத்தளிக்க வேண்டுகிறேன் நன்றி..
ReplyDelete